கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விரைவில் விலகுவார் என எதிர்பார்க்கப்படும்நிலையில், துணை முதல்வராக உள்ள சிவக்குமார் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
2023ஆம் ஆண்டு தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே போட்டி ஏற்பட்டது. பின்னர், இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களை சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் வெளிப்படையாக எதுவும் அறிக்கப்படவில்லை. இதையடுத்து, முதல்வராக சித்தராமையா பதவியேற்றார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார் இருந்து வருகிறார். என்றாலும், கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்து பேச்சுகள் அவ்வபோது எழுந்து வருகின்றன. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் பற்றிய பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளன. இதுதொடர்பாக, இருவரிடமும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டனர். இதற்கிடையே, கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி சித்தராமையா முதல்வர் பதவியிலிருந்து விரைவில் விலக உள்ளதாகவும், அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அவருடைய மகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், துணை முதல்வராக உள்ள சிவக்குமார் அடுத்த கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.