இந்தியா

பாஜக சார்பில் ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவைக்கு போட்டி

rajakannan

காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகி இன்று பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவை, மாநிலங்களவை எம்பி தேர்தல் வேட்பாளராக மத்திய பிரதேச பாஜக அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். அத்துடன் பாஜகவில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார். அவரை ஜே.பி.நட்டா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கட்சியில் இணைந்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிந்தியா, தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டு இடம்கொடுத்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, " மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த என்னால் அதனை நிறைவேற்ற முடியவில்லை, இதற்கு அந்தக் கட்சிதான் காரணம். இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி முன்பு இருந்தது போல இல்லை. என் வாழ்க்கையில் இரண்டு திருப்புமுனைகள் நடந்துள்ளது. அதில் முதலாவது என் தந்தையின் மரணம். இரண்டாவது இப்போது பாஜகவில் இணைந்தது" என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய பிரதேச பாஜக சார்பில் ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன் ஹர்ஷ் சிங் சவுகான் என்பவரும் வேட்பாளராக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகி இன்று பாஜகவில் சிந்தியா சேர்ந்த நிலையில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.