இந்தியா

"காங்கிரஸ் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தால் இளம் இந்தியாவை உருவாக்குவேன்" - சசிதரூர்

webteam

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன் என மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த தலைவர் சசிதரூர், தமிழக காங்கிரஸ் கமிட்டி நில்வாகிகளிடம் ஆதரவு கேட்க தமிழகம் வந்துள்ளார். தமிழகம் வந்த சசிதரூர், சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சசிதரூர், தமிழகத்திற்கு வருகை தந்து ராஜீவ்காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துவது பெருமையாக உள்ளது. அதேபோல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காமராஜரின் பங்கு தமிழகத்திற்கு அதிகமானது.

குறிப்பாக, மலைவாழ் மக்கள் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சி போன்றவைகளில் மிகப்பெரிய பங்கு உள்ளது. இதனால் ஆதரவு கேட்டு வருகை தந்துள்ளேன். சரிந்துள்ள காங்கிரஸ் கட்சியை வலுபடுத்துவேன், புத்துயிர் அளிப்பேன் என உறுதியளித்தார். இதுவரை அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. இதில் நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன். தனக்கு பிரச்சாரம் மேற்கொள்ள, நேரம் குறைவாக உள்ளது. இதனால் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் என பல விதங்களில் ஆதரவு கோரிவருகிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ராகுல் காந்தியின் நடைபயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நடைபயணத்திற்கு செல்லும் இடங்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வதுடன் பங்கேற்கின்றனர் என கூறினார். காந்தியின் குடும்பம் கார்க்கேக்கு ஆதரவு அளித்து வருவதாக சமூக வளைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால் காந்தி குடும்பம் இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்கவில்லை.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடைபெறும். அதில் யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ்-க்கு தான் அந்த வெற்றி எனவும், தமிழக காங்கிரஸ் கமிட்டியிடம் ஆதரவு கோருகிறேன். தமிழில் மொழிபெயர்ந்து தனது பிரச்சாரத்தை முன்வைப்பேன் என கூறினார். இந்த உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும், கட்சியின் அடிப்படையில் சில மாற்றங்களை கொண்டு வந்து, நிர்வாகிகளை நியமிப்பேன். கட்சியின் அரசியலமைப்பு வலுவாக உள்ளது எனவும், இன்று இரவு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருகிறேன் என தெரிவித்தார்.