இந்தியா

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!

ச. முத்துகிருஷ்ணன்

பிரபல மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபுவின் புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரித்த படங்களில் நடித்த பெண் நடிகை ஒருவர், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொச்சி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கடந்த ஒன்றரை மாதங்களாக விஜய் பாபுவால் தான் உடல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்ததாக அந்த பெண் விவரித்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் நேரலையில் உரையாடிய விஜய் பாபு, பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தினார்.

இதனையடுத்து நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பாலியல் புகார் கூறிய பெண்ணின் பெயரை வெளியிட்டதால் விஜய் பாபு மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்தனர். இதனிடையே இன்னொரு பெண்ணும் நடிகர் விஜய் பாபு மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பேரில் எர்ணாகுளம் போலீசாரும் விஜய் பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் ஃபேஸ்புக் பதிவில் நடிகர் விஜய் பாபு தனது மீதான பாலியல் புகார்களை மறுத்தார். ''நான் எந்த தவறும் செய்யாததால் பயப்படவில்லை. உண்மையாக நான்தான் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த நாட்டின் சட்டம் அவளைப் பாதுகாக்கிறது, நான் கஷ்டப்படுகையில் அவள் நிம்மதியாக இருக்கிறாள்'' என்று அவர் கூறினார். இந்த சம்பவத்திற்கு பின் நடிகர் விஜய் பாபு துபாய் சென்று விட்டதால் அவரை கைது செய்ய இயலாமல் கேரள போலீசார் திணறினர்.

விஜய் பாபு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மே 31 அன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் அடங்கிய அமர்வு, விஜய் பாபுவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து ஜூன் முதல் வாரத்தில் துபாயில் இருந்து கேரளா திரும்பினார் விஜய்பாபு. இந்நிலையில் விசாரணைக்காக எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூன் 27 (திங்கள்கிழமை) தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை விஜய் பாபுவை விசாரிக்க, விசாரணைக் குழுவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். குற்றம்சாட்டுபவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிராக சமூக ஊடகங்கள் அல்லது பிற முறைகள் மூலம் அவர் எந்த விதமான தாக்குதலிலும் ஈடுபடக்கூடாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் கேரளாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.