இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கான முக்கிய 'கீமோதெரபி' (Chemotherapy) மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நுரையீரல், மார்பகம், கருப்பை உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களைக் குணப்படுத்தப் பயன்படும் 'கார்போபிளாட்டின்' (Carboplatin) மற்றும் 'சிஸ்பிளாட்டின்' (Cisplatin) ஆகிய மருந்துகளின் இருப்பு மருத்துவமனைகளில் வேகமாகத் குறைந்து வருகிறது.
இம்மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படும் மிகத் தூய்மையான பிளாட்டினம் (Platinum) உலோகத்தின் சர்வதேச விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. மேலும், மேற்காசிய நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த மருந்துகள் மத்திய அரசின் 'தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில்' உள்ளதால், மருந்து நிறுவனங்களால் தன்னிச்சையாக விற்பனை விலையை உயர்த்த முடியவில்லை. இதனால் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. எய்ம்ஸ் உள்ளிட்ட முன்னணி மருத்துவமனைகள் இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளன. தட்டுப்பாட்டைச் சீராக்க விரைவில் விலைத் திருத்தம் அல்லது சிறப்புச் சலுகைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.