இந்தியா

ஆந்திராவில் தொடர் மின்வெட்டு - செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்

Veeramani

ஆந்திராவில் தொடர் மின்வெட்டுகள் காரணமாக, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

ஆந்திராவில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் காரணமாக பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் விசாகப்பட்டினம் மாவட்டம் நரசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்றிரவு பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்துக் கொண்டிருந்தபோது, மின்வினியோகம் தடைபட்டது. இந்த சூழலில் சாமர்த்தியமாக செயல்பட்ட மருத்துவர்கள், தங்கள் செல்போனில் டார்ச் அடித்து அந்த வெளிச்சத்தில் நல்லபடியாக பிரசவம் பார்த்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது.

மின்வெட்டினால் அரசு மருத்துவமனையே இருளில் மூழ்கியதால் பச்சிளம் குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்களும், பிரசவத்துக்காக வந்துள்ள கர்ப்பிணிப்பெண்களும் கொசுக்கடியில் தவித்து வருகின்றனர். அந்த மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர்களும் இயங்கவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.