சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்யப்பட்ட வழக்கில் நஷ்ட ஈடு ரூ.1.30 கோடியை நம்பி நாராயணனிடம் கேரள அரசு வழங்கியது.
கிரையோஜனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994ஆம் ஆண்டு கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் நம்பி நாராயணன் இவ்வழக்கில் நிரபராதி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி இருந்தது.
கேரளாவில் சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளானதாக திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேரள முன்னாள் முதன்மைச் செயலாளர் ஜெயக்குமார் அரசுக்கு சிபாரிசு செய்தார். இதனை ஏற்ற கேரள அமைச்சரவை, அந்தப் பணத்தை தர ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் நேற்று ரூ.1.30 கோடியை நம்பி நாராயணனிடம் கேரள அரசு வழங்கியது. இது குறித்து தெரிவித்துள்ள நம்பி நாராயணன், மகிழ்ச்சி. இந்த போராட்டம் பணத்திற்காக அல்ல. தவறான நீதிக்கு எதிரான போராட்டம் என தெரிவித்துள்ளார்.