இந்தியா

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு - மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்

kaleelrahman

புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டது. உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து இனிப்புகள், பலூன்கள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறைக்குப் பின்பு இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டும் மூடப்பட்டும் வந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் பெருமளவு குறைந்துள்ள நிலையில் முழுமையாக பள்ளிகளை இயக்க அரசு முடிவெடுத்தது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான இன்று உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் இனிப்புகள் மற்றும் எழுதுப் பொருட்களை வழங்கி வரவேற்றனர்.

இதேபோல் லாஸ்பேட்டை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தும், மலர் தூவியும், வண்ண வண்ண பலூன்கள் வழங்கியும் ஆசிரியர்கள் வரவேற்றனர். இதனால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்குள் சென்று தங்களது வகுப்புகளில் அமர்ந்து பாடங்களை படித்தனர்.

மேலும் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு, ஜூலை 11-ம் தேதி முதல் அவர்களுக்கான வகுப்புகளும் தொடங்கப்பட இருக்கிறது. இதனிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்றும் நாளையும் அரை நாள் மட்டுமே இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் முழுமையாக பள்ளிகள் இயங்கத் தொடஙகவுள்ள நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, பகல் உணவு, சீருடை, பாடப் புத்தகங்களை வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது