நாடு முழுவதும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் இன்று சேவை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் எச்சரிக்கையை மீறி மருத்துவர்கள் 6 நாட்களாக போராடி வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் ஆனால் ஊடகங்கள் முன்னிலையில் பேச்சுவார்த் தை நடத்தப்பட வேண்டுமெனவும் மருத்துவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இதையடுத்து இன்று போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு பணிக்கு ஆட்களை நியமிக்க வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியும் வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்யா கந்த் அமர்வு, நாளை வழக்கை விசாரிப்பதாக அறிவித்துள்ளது.