இந்தியா-இலங்கை இடையே அமைந்துள்ள ராமர் பாலத்தை பழங்கால வரலாற்று சின்னமாக அறிவிப்பது தொடர்பான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா- இலங்கை இடையே அமைந்துள்ள மணல் திட்டுகளால் ஆன பாலம் போன்ற அமைப்பு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல ராமரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தப் பகுதியில் சேது சமுத்திரம் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது இந்து மதத்தின் அடையாளம் என்பதால் பண்டையகால வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கவேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தை மூன்று மாதங்களுக்கு பிறகு எழுப்பும்படி குறிப்பிட்ட நீதிமன்றம், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி உத்தரவிட்டது.