பிரதமர் ஆயுஷ்மான் திட்டத்தில் மத்திய அரசினுடைய ஒப்பந்தத்தில் டெல்லி அரசு கையெழுத்திட வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் போதிய படுக்கை வசதி மற்றும் வேண்டிலேட்டர் வசதி இல்லாதவை குறித்து கடந்த 2017ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.
இவ்வழக்கில் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்த டெல்லி உயர்நீதிமன்றம், "மத்திய அரசின் ‘பிரதமர்-ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மிஷன்’ எனும் திட்டத்தில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ள போதும் டெல்லி அரசு மட்டும் மத்திய அரசின் திட்டத்தில் இணையாமலும், அதனை செயல்படுத்தாமலும் இருப்பது நியாயமாகாது. எனவே திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்" என உத்தரவிட்டது.
ஆனால், இவ்விவகாரம் நீதிமன்ற வரம்புக்குள் வராது என தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் ஏ.ஜி மசிஹ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
டெல்லி அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவு டெல்லி அரசின் கைகளை கட்டுவது போல் உள்ளது. திட்டத்தில் இணைந்தால் திட்டத்திற்கான மூலதன செலவில் 60 சதவீத பங்கு மத்திய அரசுடையது 40 சதவீத பங்கு மாநில அரசுடையது என்றாலும், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான மத்திய அரசின் பங்கு பூஜ்ஜிய சதவீதமாக உள்ளது" என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
வாதத்தை ஏற்ற நீதிபதிகள் இவ்வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்தோடு, மத்திய அரசின் பிரதமர்-ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மிஷன் திட்டத்தில் இணைய வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.