டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் தடை தளர்ந்ததாக கருதப்படும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
டிக்டாக்’ செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு தடைவிதிக்கக் கோரி மதுரையைச் சேரந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘டிக்டாக்’ செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து ‘டிக்டாக்’ செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்து அந்நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘டிக்டாக்’ செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்து ஏப்ரல் 22ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைத்தது. இதனிடையே டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்யும் வசதியை ப்ளே ஸ்டோர் நீக்கியது.
இந்நிலையில் டிக் டாக் வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நாளை மறுநாள் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென்றும் தவறும் பட்சத்தில் டிக் டாக் மீதான தடை தளர்ந்ததாக கருதப்படும் என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது