கடன் இஎம்ஐ தொடர்பாக வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உரிய பதிலளிக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கூலித் தொழிலாளர்கள், தொழில் முனைவோர் என பலரும் வேலை செய்யமுடியாத நிலையில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்கு மக்கள் வங்கிகளில் பெற்ற கடனுக்கான இ.எம்.ஐ எனப்படும் மாதத்தவணையை செலுத்த ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்தது.
ஆனால் நிபந்தனைகளுடன் கூடிய இ.எம்.ஐ சலுகையை மாநில மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்தன. அதன்படி, 3 மாதங்களுக்கு இ.எம்.ஐ செலுத்த வேண்டாம் எனும் வாடிக்கையாளர்களுக்கு தனியாக ஒரு ஆப்ஷன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதனை பயன்படுத்தி மூன்று மாத தவணைகளை தள்ளி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் அந்த மூன்று மாதங்களுக்கும் உரிய வட்டியை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூடுதல் வட்டியை தவிர்க்க நினைத்தால் எப்போதும் போல இ.எம்.ஐ செலுத்தலாம் எனவும் கூறப்பட்டது.
இதனையடுத்து வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசு விளக்கமளிக்காத சூழலில் பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. அப்போது "கொரோனா பொது முடக்கத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மத்திய அரசின் கடமைதான். வட்டி வசூல் தொடர்பாக ரிசரவ் வங்கியை காரணம் காட்டி மத்திய அரசு தப்பித்துக்கொள்வதை ஏற்க முடியாது. எப்போதும் ரிசரவ் வங்கியின் பின்னால் மத்திய அரசு ஒளிந்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளீர்கள். கடன் செலுத்துவோரின் பாதிப்புக்கு மத்திய அரசின் பொது முடக்க உத்தரவே காரணம்" என்று உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.