இந்தியா

சமையலறை சர்ச்சை: சிறைமாறுகிறார் சசிகலா!

webteam

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு தனி சமையலறை, சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா புகார் கூறியுள்ளார். இது, கர்நாடகம், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இதற்கிடையே சிறையில் கைதிகள், டி.ஐ.ஜி. ரூபாவுக்கு ஆதரவாகவும் டிஜிபி சத்யநாராயண ராவுக்கு ஆதரவாகவும் இரு பிரிவாக பிரிந்துள்ளனர்.
இது கைதிகளுக்குள் கோஷ்டி மோதலை உருவாக்கும் என்பதால் 32 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு நேற்று மாற்றப்பட்டனர். சசிகலாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அவரையும் வேறு சிறைக்கு மாற்ற கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  அவர் தும்கூர் சிறைக்கு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.