Sanjukta Parashar Sanjukta Parashar insta
இந்தியா

CoBRA படையின் முதல் பெண் தளபதி.. வரலாறு படைத்த சஞ்சுதா பராஷர்.. யார் இந்த இரும்புப் பெண்மணி?

ஆண்கள் மட்டுமே தலைமைப் பொறுப்பு வகித்து வழிநடத்தி வந்த இந்திய பாதுகாப்புப் படையின் முக்கியமான அதிரடிப் பிரிவான CoBRA-வை, இப்போது முதல்முறையாக ஒரு பெண் அதிகாரி வழிநடத்த இருக்கிறார்.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார் .ர

ஆண்கள் மட்டுமே தலைமைப் பொறுப்பு வகித்து வழிநடத்தி வந்த இந்திய பாதுகாப்புப் படையின் முக்கியமான அதிரடிப் பிரிவான CoBRA-வை, இப்போது முதல்முறையாக ஒரு பெண் அதிகாரி வழிநடத்த இருக்கிறார். CoBRA படை என்றால் என்ன? இந்த அதிரடிப் படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள பெண் அதிகாரி யார்? அவரது பின்னணி என்ன? இதோ பார்க்கலாம்...

CoBRA FORCE

இந்தியாவின் நக்சல் எதிர்ப்பு சிறப்புப் படையான CoBRA-வின் தளபதியாக நியமிக்கப்பட்டு வரலாறு படைத்துள்ளார் IPS அதிகாரி சஞ்சுதா பராஷர். இந்திய ரிசர்வ் போலீஸ் படையான CRPF-ன் சிறப்புப் பிரிவாக 2008-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் CoBRA — Commando Battalion for Resolute Action. அடர்ந்த காடுகளில் பதுங்கியிருந்து செயல்படுவது, கெரில்லா போர் முறைகளை எதிர்கொள்வது, வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்கச் செய்வது, கடினமான நிலப்பரப்புகளில் நடவடிக்கைகளை மேற்கொள்வது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்காக CoBRA கமாண்டோக்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். குறிப்பாக, நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தப் படை முக்கியப் பங்காற்றி வருகிறது.

CRPF-இன் 207-ஆவது CoBRA பட்டாலியனின் கமாண்டண்டாக சஞ்சுதா பராஷர் பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் CoBRA பட்டாலியனை வழிநடத்தும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 2006-ஆம் ஆண்டு IPS அதிகாரியாக தேர்வான சஞ்சுதா பராஷர், அசாம்–மேகாலயா கேடரைச் சேர்ந்தவர். காவல் துறையில் தனது பணிக்காலத்தில் தீவிரவாதம் மற்றும் நக்சல் பாதிப்பு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.

கடினமான பாதுகாப்புச் சூழல்கள் நிறைந்த பகுதிகளில் பணியாற்றியதுடன், தேசிய புலனாய்வு முகமையான NIA-விலும் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் DIG பதவியில் பணியாற்றிய அனுபவம் சஞ்சுதா பராஷருக்கு உள்ளது. அசாமில் பணியாற்றிய காலத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அவர் வகித்த பங்குக்காக, ’Iron Lady of Assam’ என்ற அடையாளத்தாலும் அவர் அறியப்படுகிறார். பெண்கள் பாதுகாப்புப் படைகளில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை ஏற்று வரும் நிலையில், CoBRA போன்ற சிறப்புப் பிரிவின் பட்டாலியன் கமாண்டண்டாக ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டிருப்பது, இந்திய பாதுகாப்புத் துறையில் பெண்களின் அதிகரித்து வரும் தலைமைப் பங்களிப்பை எடுத்துக்காட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.