இந்தியா

“துப்புரவு பணியாளருக்கு முதல் தடுப்பூசியை செலுத்தியது ஏன்?”- எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்

“துப்புரவு பணியாளருக்கு முதல் தடுப்பூசியை செலுத்தியது ஏன்?”- எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்

EllusamyKarthik

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியை நாடு முழுவதும் அரசு தொடங்கியுள்ளது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இந்த பணியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவிலேயே முதல் நபராக டெல்லியை சேர்ந்த துப்பரவு பணியாளர் மணீஷ் குமாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அது ஏன் என்பதை விவரிக்கிறார் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா. 

“நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை, எங்கிருந்து வந்திருந்தாலும் பரவாயில்லை. கொரோனா பொதுமுடக்க நாட்களில் இந்த சமூகத்திற்கு நீங்கள் கொடுத்த பங்களிப்பை ஒருபோதும் மறக்க மாட்டோம். உங்களுக்கு என்றுமே நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என சொல்லிதான் மணீஷுக்கு தடுப்பூசியை செலுத்தினோம் என்கிறார் டாக்டர் ரன்தீப் குலேரியா. 

நோய்த்தொற்று பரவலில் இருந்து தப்பிப்பதற்கான எந்தவித முறையான பயிற்சியும் இல்லாமல் கொரோனா தொற்று பரவியிருந்த பகுதிகளில் தன் உயிரை பணயம் வைத்து உழைத்தவர்தான் துப்புரவு பணியாளர் மணீஷ். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். 

“கொரோனா தொற்று இந்தியாவில் தீயாக பரவிய சமயத்தில் களத்தில் எந்தவித பயிற்சியும் இல்லாமல் உழைத்த மக்கள்தான் நிஜ ஹீரோக்கள். அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக தான் மணீஷுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார் டாக்டர் ரன்தீப் குலேரியா.