இந்தியா

"உள்ளூர் தாதா" துப்பாக்கிச்சூடு ! - அரசியல் கட்சி பிரமுகரும் மகனும் பலி !

jagadeesh

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சாலை அமைத்தது தொடர்பான தகராறில் சமாஜ்வாதி கட்சிப் பிரமுகரும் அவரது மகனும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து 39 ஆயிரம் பேர் இதுவரை மீண்டுள்ளனர். மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக சில தளர்வுகளுடன் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில தளர்வுகளுக்குப் பின்பு ஆங்காங்கே குற்றச்சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சாம்சோய் என்ற கிராமம் உள்ளது. இங்குப் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவரின் கணவர் லால் திவாகர், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய பிரமுகராக அறியப்படுகிறார். அவரும், அவரது மகனும், கிராமத்தில் அமைக்கப்பட்ட சாலையைப் பார்வையிடச் சென்றுள்ளனர். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் இந்தச் சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சாலையைப் பார்வையிட்ட லால் திவாகர் மற்றும் அவரது மகன் சுனில் ஆகியோரிடம் உள்ளூர் பிரமுகர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். இதில் சவிந்தர் என்கிற உள்ளூர் தாதாவும் அவருடன் வந்தவரும் திவாகர் மற்றும் சுனிலிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இது கைகலப்பானது. அப்போது, சவிந்தரும், அவருடன் வந்திருந்தவரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் திவாகரும், சுனிலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்துக்குப் பின்பு துப்பாக்கியால் சுட்டவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.