இந்தியா

சீக்கியருக்கு எதிரான வன்முறை வழக்கு - சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை

rajakannan

சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984ல் நடந்த கலவர வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ‌ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவலராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் விளைவாக சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. அரசின் கணக்குப்படி இந்த வன்முறைகளில் சுமார் 2800 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக அரசின் கணக்கு கூறுகிறது. டெல்லியில் நடந்த இந்த வன்முறை சம்பவங்கள் காவல்துறையினரின் துணையுடனே நடந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

சீ்க்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் கலவரம் தொடர்பான வழக்குகளின் விசாரணை நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984ல் நடந்த கலவர வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ‌ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 31ஆம் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.