இந்தியா

சரணடைய 30 நாள் அவகாசம் வேண்டும்: சஜ்ஜன் குமார் மனு தாக்கல்!

webteam

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார், தான் சரணடைய 30 நாள் அவகாசம் வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவலரால் 1984 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் விளை வாக சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. அரசின் கணக்குப்படி இந்த வன்முறைகளில் சுமார் 2800 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக அரசின் கணக்கு கூறுகிறது. டெல்லி யில் நடந்த இந்த வன்முறை சம்பவங்கள் காவல்துறையினரின் துணையுடனே நடந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

சீ்க்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளின் விசாரணை நடைபெற்று வந்தன. 

இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984ல் நடந்த கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ‌ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வரும் 31ஆம் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.

இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில் தனது ராஜினாமாவை அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தான் சரண்டைய இன்னும் 30 நாள் அவகாசம் வேண்டும் என்று சஜ்ஜன் குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை வருகிறது.