இந்தியா

சச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது : ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

webteam

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது வரும் 24ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அக்கட்சியின் மாநில தலைவரும், துணை முதல்வருமாக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். அவருக்கு 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். அவர்கள் டெல்லியில் முகாமிட்டு தங்கியிருந்த நிலையில், சச்சின் பைலட்டின் பதவிகளை காங்கிரஸ் பறித்தது.

இதையடுத்து அவர் பாஜகவில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் தகுதி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸை அனுப்பிய சபாநாயகர், உரிய விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பிலிருந்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், வரும் 24ஆம் தேதி வரை சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது.