இந்தியா

சபரிமலை சென்ற 11 பெண்கள் தடுத்து நிறுத்தம் !

webteam

சென்னையிலிருந்து சபரிமலைக்குச் சென்ற 11 பெண்கள், பம்பையில் ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 

சென்னையிலிருந்து சபரிமலை சென்ற 11 பெண்கள் பம்பை அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது பம்பை விநாயகர் கோவிலில் பெண்களுக்கு இருமுடி கட்ட அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் தமிழக பெண்கள் மற்றும் பம்பை அர்ச்சகர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து 6 பெண்கள் தாங்களே இருமுடி கட்டிக்கொண்டு காலை 5.30 மணிக்கு சபரிமலை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். 11 பெண்களில் 9 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர் பம்பையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் சென்னையை சேர்ந்த 11 பெண்களும் ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண்களை எதிர்த்தும், ஐயப்பன் சாமியை வேண்டியும் சரணகோஷமிடும் ஐயப்ப பக்தர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த 11 பெண்களும் சபரிமலை செல்ல ஏற்கெனவே பாதுகாப்பு கோரி, கேரள முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சபரிமலைக்கு திருநங்கையில் சிலர் சென்று ஐயப்ப தரிசனம் செய்து வந்தனர். ஆனால் அவர்களுக்கு ஐயப்ப பக்தர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்லும் போது, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.