இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் குறைந்தது!

jagadeesh

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் ரூ 62 கோடி குறைந்ததாக தேவஸம்போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வார நாட்களில் தினசரி 1000 பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் 2 ஆயிரம் பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

சாமியை தரிசிக்க, பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று அனைத்து தரப்பிலும் கோரிக்கை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2 ஆம் தேதி முதல் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனாலும் கடந்த ஆண்டைபோல் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், சபரிமலைக்கு வரும் வருமானம் மிகவும் குறைந்து உள்ளது. கடந்த மாதம் 15 ஆம் தேதியில் இருந்து 23 நாட்களில் நடை வருமானமாக ரூ.3 கோடியே 82 லட்சம் மட்டுமே கிடைத்து உள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாததால், சபரிமலைக்கு பக்தர்கள் வந்து குவிந்தனர். அதைத்தொடர்ந்து கோயில் நடை திறந்து 23 நாட்களில் நடை வருமானமாக ரூ.66 கோடி கிடைத்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ரூ.62 கோடி வருவாய் குறைந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.