நடிகர் ஜெயராம் எக்ஸ் தளம்
இந்தியா

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு.. கைதான நபர்களுடன் தொடர்பு.. நடிகர் ஜெயராமிடம் விசாரணை!

சபரிமலை ஐய்யப்பன் கோயில் தங்க முறைகேடு வழக்கு தொடர்பாக மலையாள நடிகர் ஜெயராமிடம் சென்னையில் கேரள சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

Prakash J

சபரிமலை ஐய்யப்பன் கோயில் தங்க முறைகேடு வழக்கு தொடர்பாக மலையாள நடிகர் ஜெயராமிடம் சென்னையில் கேரள சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட செப்புத் தகடுகள் சம்பந்தப்பட்ட அவரது வீட்டில் நடத்தப்பட்ட மதச் சடங்கு குறித்த ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதைச் செப்பனிட்டபின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயில்

அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது. இந்த விவகாரம், பக்தர்கள் மற்றும் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கத்தின் எடை குறைந்ததில் உள்ள முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தி, முராரி பாபு உள்ளிட்ட 12 பேர் சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சபரிமலை ஐய்யப்பன் கோயில் தங்க முறைகேடு வழக்கு தொடர்பாக மலையாள நடிகர் ஜெயராமிடம் சென்னையில் கேரள சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட செப்புத் தகடுகள் சம்பந்தப்பட்ட அவரது வீட்டில் நடத்தப்பட்ட மதச் சடங்கு குறித்த ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

actor jayaram

2019ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு மத நிகழ்வில் நடிகர் ஜெயராம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து, புலனாய்வாளர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். தங்கத் திருட்டு வழக்கின் முதன்மைக் குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் பாட்டியுடன் ஜெயராம் எத்தனை முறை மதச் சடங்குகளில் பங்கேற்றார், இருவருக்கும் இடையே ஏதேனும் நிதி பரிவர்த்தனைகள் உள்ளதா என்பது குறித்த விவரங்களை புலனாய்வாளர்கள் கோரியதாக செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.