இந்தியா

சபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு!

சபரிமலை விவகாரம்: தேவசம் போர்டு இன்று முக்கிய முடிவு!

webteam

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் தேவசம் போர்டு இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. இதை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் இதை எதிர்க்க மாட்டோம் என்றும் என்று கூறிவிட்டது. கோயிலுக்கு வரும் பெண்களுக்கு போதிய வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது. 

ஆனால், அனைத்து வயது பெண்களையும் கோயிலில் அனுமதிக்கும் முடிவுக்கு அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொள்கிறார்கள்.

கேரள அரசின் முடிவுக்கு காங்கிரஸும், பாரதீய ஜனதாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யக்கோரியும் பாரதீய ஜனதா சார்பில் சபரிமலை ஆசார பாதுகாப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. 22-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடை திறந்து இருக்கும். இப்போது பெண்களும் கோவிலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதற்கிடையே, திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு இன்று முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. இதில் கலந்துகொள்ளுமாறு ஐயப்பன் கோவில் தலைமை தந்திரி, பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை ஏற்பாடுகள் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.