இந்தியா

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு: இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

JustinDurai
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று செவ்வாய்கிழமை முதல் பக்கதர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
சபரிமலை கோயிலில் டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. இந்த 61 நாட்கள் தரிசனத்திற்கான இணையதள முன்பதிவு ஏற்கனவே நிறைவடைந்து விட்டது. கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பம்பையில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், பக்தர்கள் சன்னிதானம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தங்கி செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரையே அனுமதிக்கப்படும் என்றும், அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.