sabarimala x page
இந்தியா

சபரிமலை தங்கம் திருட்டு | கோயில் முன்னாள் அதிகாரி கைது!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் காணாமல் போனது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட முராரி பாபு, நேற்று அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.

Prakash J

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் காணாமல் போனது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட முராரி பாபு, நேற்று அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்டபின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது. இந்த விவகாரம், பக்தர்கள் மற்றும் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கத்தின் எடை குறைந்ததில் உள்ள முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க, நீதிபதிகள் ராஜா விஜயராகவன்.வி மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

sabarimala

இதற்கிடையே, 2019இல் சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மீதான தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளை தாமிரத் தகடுகளாக தவறாகப் பதிவு செய்ததாக, அப்போதைய நிர்வாக அதிகாரி பி.முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு இடைநீக்கம் செய்தது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரிய செயலர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தேவசம் போர்டு அதிகாரிகளே இந்த கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் தகடுகள் மாயமான வழக்கில், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். இந்த நிலையில், சபரிமலையில் தங்க தகடுகள் மாயமான விவகாரத்தில் கோயிலின் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு சிறப்பு புலனாய்வுக் குழுவால் நேற்று அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைதாகும் 2ஆவது நபர் முராரி பாபு ஆவார்.

sabarimala

இடைநீக்கம் செய்யப்பட்ட நேரத்தில், முராரி பாபு ஹரிபாட்டில் துணை தேவசம் கமிஷனராகப் பணியாற்றி வந்தார். முதற்கட்ட விசாரணையை நடத்திய தேவசம் போர்டு விஜிலென்ஸ், முராரி பாபு மற்றும் ஏழு அதிகாரிகளின் தொடர்பு குறித்து சந்தேகத்தை எழுப்பியது, இதில் பாபு, ஏழு அதிகாரிகள் மற்றும் போத்தி ஆகியோர் இடையே தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை ஒப்படைப்பு தொடர்பாக தவறுகள் நிகழ்ந்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பு விசாரணைக் குழு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.