இந்தியா

இந்த 6 நாடுகளிலிருந்து வரும் பயணிகளா? - ஜன. 1 முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!

சங்கீதா

வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தலைத் தூக்கியுள்ளது. ஒமிக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரஸ் தான் இதற்கு காரணம் என்றும், இந்த கொரோனா அதிவேகத்தில் பரவும் என்றும் கூறப்பட்டு வருகிறது. சீனா மட்டுமின்றி கிழக்கு ஆசிய நாடுகளிலும் இந்த புதிய திரிபு அதிவேகமாக பரவி வருகிறது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் நிலையில், இந்தியாவிலும் 4 பேர் இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஜனவரி 1-ம் தேதி முதல் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய 6 நாடுகளில் இருந்து வருவோருக்கு நெகட்டிவ் ஆர்.டி.பி.சிஆர். சான்றிதழ் கட்டாயம் என்றும், மேலும், பயணத்திற்கு முன் பயணிகள் தாங்கள் பரிசோதனை செய்த அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என்றும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார். சர்வதேசப் பயணிகள், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், அடுத்த 40 நாட்கள் இந்தியாவிற்கு முக்கியமானதாக இருக்கும் என மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.