இந்தியா

"ஓடிடிகளில் வரும் திரைப்படங்கள், நிகழ்ச்சிகளுக்கு வரையறை வேண்டும்" - ஆர்.எஸ்.எஸ். தலைவர்

Sinekadhara

ஓடிடி, செல்போன்களில் வரும் நிகழ்ச்சிகள், திரைப்படங்களுக்கு வரையறையை வகுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பெரும்பாலும் அனைத்துக் குழந்தைகளும் செல்போனை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அவர்கள் செல்போனில் பார்ப்பவைகள் கட்டுப்படுத்தப்படவில்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் விஜயதசமி விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும் இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடும் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளால் துப்பாக்கி உபயோகிக்க பயிற்சி அளிக்கப்பட்டு அவை தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும், பிட்காயின் போன்ற ரகசியமான, கட்டுப்பாட்டில் இல்லாத நாணயங்கள் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் எனவும் கூறினார். எனவே அரசு இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகம் காத்திருக்கக் கூடாது எனவும், வீட்டில் குழந்தைகள் குறித்த கவனம் வேண்டும் எனவும் கூறினார். குழந்தைகளுக்கு மனதளவில் இடைவெளி வேண்டும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கவேண்டும்; இதுவே பலதரப்பட்ட மனநல தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் என்பதை தெளிவாக அவர்களுக்கு எடுத்துரைக்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.