2023ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் பாஜகவே வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அம்மாநில முதல்வராக மோகன் யாதவ் உள்ளார். அம்மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான இந்தூர், நாட்டில் உள்ள சுத்தமான நகரங்களில் ஒன்றாகப் புகழப்பட்டு வருகிறது. இதையடுத்து, அந்த நகரத்தை பிச்சைக்காரர்கள் அற்ற நகரமாக மாற்ற வேண்டும் எனும் முயற்சி எடுக்கப்பட்டது. இந்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் மூலம் இந்தூர் உள்ளிட்ட 10 இந்திய நகரங்களை பிச்சைக்காரர்கள் அற்ற நகரமாக மாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, இந்தூர் மாவட்டத்தில் பிச்சை எடுப்பதும் கொடுப்பதும் தடை செய்யப்படுவது குறித்து கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், இது நடப்பாண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தூரில் கொண்டுவரப்பட்ட இந்த தடையினால் பிச்சை கேட்பவரோ அல்லது கொடுப்பவரோ கண்டறியப்பட்டால் அவர்கள் மீது பாரத் நியாய் சன்ஹிதா பிரிவி 233 கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், இந்தக் குற்றத்தினால் அவர்களுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
முன்னதாக, கடந்த 4 மாதங்களில் அம்மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனைகளில் 400 பிச்சைக்காரர்கள் கண்டறியப்பட்டு மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், பிச்சை எடுத்த 64 குழந்தைகள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 2ஆம் தேதி இந்தூர் நிர்வாகம் பிச்சை எடுப்பவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1000 சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. மேலும், தகவல் கொடுக்க செல்போன் எண்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு இந்தூர் நகரத்தின் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் அஷிஷ் சிங், “இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்டோர் நிர்வாக எண்களுக்கு அழைத்து தகவல் கொடுத்தனர். ஆனால், அதனை விசாரித்ததில் 12 பேர் கொடுத்த தகவல் மட்டுமே உண்மை என உறுதி செய்யப்பட்டது. அந்த 12 பேரில் 6 பேருக்கு இன்று ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.1,000 பரிசு வழங்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.