இந்தியா

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம், 2 வருடங்கள் சிறை: அதிரடி சட்டம்

webteam

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 2 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என ஜார்க்கண்ட் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 45,270 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 1,129 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12,38,635 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,82,606 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நிலையில், 4,26,167 சிகிச்சையில் உள்ளனர். மொத்த எண்ணிக்கையில் 29,861 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அனைத்து மாநில அரசுகளும் கொரோனா பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் வகையில் தொற்றுநொய் பரவல் தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

அதன்படி, கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 2 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாஸ்க் அணியாதவர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்கள் மீதும் இந்த சட்டம் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.