மௌலானா ஜார்ஜிஸ் அன்சாரி india today
இந்தியா

”கிருஷ்ண பகவான் ஒரு முஸ்லிம்..” மதகுருவின் பேச்சால் வெடித்த சர்ச்சை!

கிருஷ்ணர் ஒரு முஸ்லிம் என்றும், அவர் தினமும் ஐந்துவேளை தொழுகை நடத்தினார் என்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த நபர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

ஜார்க்கண்டு மாநிலத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், உபியைச் சேர்ந்த மதகுருவான மௌலானா ஜார்ஜிஸ் அன்சாரி என்பவர் கிருஷ்ண பகவான் ஒரு முஸ்லிம் என்றும், அவர் தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்தினார் என்றும் பேசியுள்ளார். இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், "நம் சகோதரர்கள் தவறாக நினைக்காவிட்டால், கிருஷ்ணரேகூட ஒருநாளைக்கு ஐந்து வேளை பிரார்த்தனை செய்து வந்தார். நீங்கள் நம்பவில்லை என்றால், ஸ்ரீ பகவத் கீதையின் 6-ஆவது அத்தியாயத்தின் 10-ஆவது சுலோகத்தைப் பாருங்கள்" என்று பகவத் கீதையைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “இந்துக்கள் அவர்களுடைய சமய புத்தகங்களைப் படித்தால்... அவர்கள் இஸ்லாத்தை நேசிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்று நம்புங்கள். ஏனென்றால், இஸ்லாம் என்பது உலக மக்களின் மதம். இது முஸ்லிம்களின் மதம் அல்ல. ராமச்சந்திரரும் இந்த மதத்தை முன்வைத்துள்ளார். கிருஷ்ணரும் இதை முன்வைத்துள்ளார்" என்று அவர் கூறினார்.

ஆனால், அவர் பேசிய கருத்தும் பகவத் கீதையின் அத்தியாயத்துடன் சார்ந்துபோகவில்லை. ஆகையால், இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரைக் கைது செய்ய வேண்டும் இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. அன்சாரி, இப்படி சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல.. இதற்குமுன்பும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2022ஆம் ஆண்டு, ’ஒரு முஸ்லிம் பெண் எந்தச் சூழ்நிலையிலும், பிரசவ வலியின்போது கூட, தன் கணவனின் பாலியல் ரீதியான அணுகுமுறைகளை மறுக்கக் கூடாது’ எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். தவிர, பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றிலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.