இந்தியா

களத்தில் நிற்கும் 9 மாத கர்ப்பிணி செவிலியர்: வியக்க வைக்கும் சேவை!!

webteam

தொற்று வியாதியான கொரோனாவை எதிர்த்து போராட, நாடே ஊரடங்கில் இருந்தாலும் ஒரு தரப்பினர் மக்களின் நலனுக்காக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக மருத்துவர்களும், செவிலியர்களும் தொற்று நோயுடன் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இந்தப்போரில் சில மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் கூட பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு சிலர் உயிரையே இழக்கின்றனர். குடும்ப உறவுகளைப் பிரிந்தும் இரவு பகல் பாராமலும் கொரோனாவை விரட்டியடிக்க உழைத்து வருகின்றனர் இவர்கள். சுகாதாரப் பணியாளர்களின் உதவியுடன் கொரோனாவை துரத்தியடிக்கும் வேலையில் அரசு மும்முரமாக இருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் 9 மாத கர்ப்பிணி ஒருவர், தினமும் மருத்துவமனை சென்று நோயாளிகளை கவனித்து வருகிறார். கர்நாடக மாநிலம் கஜனுரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா. இவர் ஜெயசமராஜேந்திரா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தான் 9 மாத கர்ப்பிணியாக இருந்தாலும், தினமும் தனது கிராமத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பயணம் செய்யும் ரூபா, அங்குள்ள நோயாளிகளை அக்கறையுடன் கவனித்து வருகிறார்.

கொரோனா நேரத்தில் தன்னுடைய தேவையை உணர்ந்து சேவை செய்து வரும் ரூபாவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ரூபா தன்னுடைய உடல்நிலையில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டுமென பலரும் அன்புக்கட்டளையும் விடுத்து வருகின்றனர்.

மேலும், மே12ம் தேதியான இன்று உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் ரூபா மாதிரியான சேவை மனப்பான்மை கொண்ட செவிலியர்களுக்கு வாழ்த்துகள் என சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்,