இந்தியா

சிறையில் இருந்த நாட்களில் கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ரியா சக்ரவர்த்தி..

JustinDurai

நடிகை ரியா சக்ரவர்த்தி சிறையில் இருந்த நாட்களில் கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பிருப்பதாக மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்யப்பட்டு பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்ட ரியா சக்ரவர்த்தியை, 28 நாள்களுக்குப் பின்னர் நேற்று மும்பை உயர்நீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் விடுவித்தது.

இந்நிலையில் ரியா சக்ரவர்த்தியின் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே, ரியா  சிறையில் எப்படி பொழுதை கழித்தார் என்பது பற்றி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘’ சிறையில் இருந்த காலத்தில் ரியா நேர்மறையாக இருக்க முயற்சித்தார். அவர் கைதிகளுக்காக யோகா வகுப்புகளை நடத்தினார். மற்ற அனைவரையும் போலவே இயல்பாகவே சிறையில் இருந்தார்.

கொரோனாவால் வெளியிலிருந்து உணவு வழங்க சிறைத்துறை அனுமதிக்கவில்லை. இதனால் அவர் சிறை உணவையே உண்டார். ரியா  ஒரு போர் வீரனைப் போல் மன உறுதியுடன் இருந்தார். அவருக்கெதிராக செயல்படும் நபர்களை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறார்” என்றார்.