சஞ்சய் ராய் எக்ஸ் தளம்
இந்தியா

கொல்கத்தா மருத்துவர் வழக்கு | குற்றவாளிக்கு மரண தண்டனை.. மேல்முறையீட்டில் நீதிபதிகள் கேள்வி!

கொல்கத்தா ஆர்.ஜி.கார் பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சிபிஐயும் மாநில அரசும் தனித்தனியாக மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அதுகுறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு (2024, ஆகஸ்ட் 9), கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு நியாயம் கேட்டு மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதில் மாநில அரசின் போக்கு மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மத்திய புலனாய்வு அமைப்பும் விசாரணையை நடத்தியது. இந்த நிலையில், இவ்வழக்கில் சீல்டா நீதிமன்றம் சஞ்சய் ராய்தான் குற்றவாளி என கடந்த ஜனவரி 18ஆம் தேதி உறுதிப்படுத்தியது. தொடர்ந்து அவருக்கு தண்டனை குறித்த விவரங்களை, ஜனவரி 20ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, குற்றவாளி சஞ்சய் ராய் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. தவிர, ராய்க்கு ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 17 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மாநில அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இந்த நிலையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல் சிபிஐயும் சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக் கோரி மேல்முறையீடு செய்துள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்றம்

இந்த மனுக்களின் மீதான விசாரணை, இன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேபாங்சு பாசக் மற்றும் நீதிபதி எம்.டி. ஷப்பார் ரஷிதி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ஒரே நோக்கத்துக்காக இரு தரப்பிலும் ஏன் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது” எனக் கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து அவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.