இந்தியா

பிரியாணியில் எலும்புத் துண்டு இருந்ததால் போலீசை நாடிய நபர்.. மேனேஜர் மீது பாய்ந்த FIR!

JananiGovindhan

குஸ்கா என்ற ப்ளைன் பிரியாணி ஆர்டர் செய்யும் போது அதில் தவறுதலாக சிக்கன் அல்லது மட்டன் பீஸ் இருந்தால் அசைவ பிரியர்களை கையிலேயே பிடிக்க முடியாது. ஆனால் இப்படியான சம்பவம் ஒன்று சைவ பிரியருக்கு நடந்ததோடு, அது காவல்துறையிடம் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது.

அந்த வகையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் தூபே என்பவர்தான் தனக்கு கிடைத்த சைவ உணவில் எலும்புத் துண்டு இருந்ததாக குறிப்பிட்டு உணவக உரிமையாளர் மீது புகார் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, வெஜ் பிரியாணி ஆர்டர் செய்திருந்த ஆகாஷ் தூபேவின் உணவில் எலும்புத் துண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறார். இதனையடுத்து அந்த உணவக உரிமையாளர் மற்றும் நிர்வாகத்திடம் கேட்ட போது அவர்கள் ஆகாஷ் தூபேவிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார்கள்.

இருப்பினும் விஜய் நகர் காவல் நிலையத்தில் ஆகாஷ் தூபே புகார் கொடுத்திருக்கிறார். இந்த புகாரை ஏற்ற போலீசார் விசாரிப்பதாகவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக பேசியுள்ள விஜயநகர் துணை காவல் ஆணையர் சம்பத் உபாத்யாய், “உணவக மேலாளர் ஸ்வப்னில் குஜ்ராட்டி மீது சட்டப்பிரிவு 298ன் கீழ் FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் கூறியிருக்கிறார்.