RBI, 2000 Note, P.Chidambaram
RBI, 2000 Note, P.Chidambaram PT web
இந்தியா

”மீண்டும் 1000 ரூபாய் நோட்டைக் கூட கொண்டு வருவார்கள்” - பொருளாதார நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

Prakash J

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. அதன்படி, ” ’கிளீன் நோட் பாலிசி’ என்ற அடிப்படையில் இந்த ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அதேநேரத்தில், புழக்கத்தில் உள்ள அத்தகைய நோட்டுகள் செல்லும் எனவும், வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை தினமும் ரூ.20,000 மதிப்பு அளவுக்கு வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், “வங்கிகளில் செலுத்தப்படும் 2,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது எனவும், 2018-19ஆம் ஆண்டு முதல் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது எனவும், 2017 மார்ச் மாதத்துக்கு முன்பு 89 சதவிகிதம் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன எனவும் அது தெரிவித்துள்ளது.

”மீண்டும் 1000 ரூபாய் கூட கொண்டுவருவார்கள்” - ப.சிதம்பரம் கருத்து

இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில், “எதிர்பார்த்தது போலவே, ஆர்பிஐ ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டு ஆனது பரிமாற்றத்திற்கு உகந்த ஊடகமாக இல்லை என 2016 நவம்பரில் நாங்கள் சொன்னோம். நாங்கள் சொன்னது சரிதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

ரூ.500 மற்றும் ரூ.1000 பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவை மறைப்பதற்காகவே உடனடியாக ரூ.2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, ஆர்பிஐ ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1000 ரூபாய் நோட்டை ஆர்பிஐ மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்

பணமதிப்பு நீக்கம் அதன் சுழற்சியை முடித்து அதே இடத்திற்கு வந்துவிட்டது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்பிஐ-ன் இந்த நடவடிக்கை குறித்து பொருளாதார நிபுணர் புகழேந்தி சொல்வது குறித்து கீழே உள்ள வீடியோ தொகுப்பில் காணலாம்.

அதேபோல், “2000 ரூபாய் நோட்டு வந்தால் ஊழல் ஒழியும்னு சொன்னாங்க. ஆனால், எதுவும் நடக்கவேயில்லை” என்று வங்கி ஊழியர் சங்க நிர்வாகி கிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ள கருத்துக்களை இந்த வீடியோவில் காணலாம்.