ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கைது நடவடிக்கையை , கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட கட்டட வடிமைப்பாளரின் குடும்பத்தினர் வரவேற்று உள்ளனர்.
அலிபாக் பகுதியைச் சேர்ந்த உள்கட்டட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் தனது தாயார் குமுத் நாயக்குடன் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப், ஃபெரோஸ் ஷேக் மற்றும் நிதீஷ் சர்தா ஆகியோர் தனக்குத் தரவேண்டிய 5.40 கோடி ரூபாயை தராததே காரணம் என அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக அர்னாப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் டி ஆர்.பி ரேட்டிங் தொடர்பான வழக்குகளையும் முன்வைத்து மும்பை காவல்துறை அவரை இன்று காலை கைது செய்தது. கைதின் போது அவர் காவல்துறையால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு ஆதரவு குரல்களும் எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் அர்னாப் கைது நடவடிக்கையை அன்வய் நாயக்கின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக பேசிய அவரது மனைவி கூறும் போது “ தற்கொலை செய்து கொண்ட எனது கணவர் அர்னாப் உட்பட மூன்று நபர்களின் பெயர்களை அவர் எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று மகாராஷ்டிரா காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். அதற்காக நான் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எனது கணவர் பணத்தைப் பெற்றிருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார். என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக சைபர்துறை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு தெரியப்படுத்திய போதும், அது குறித்தான எந்த பதிலும் வரவில்லை எனவும் அவர்கள் கூறினர்.