இந்தியாவில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர, கரும்பு உற்பத்தி குறைவு மற்றும் பண்டிகைக் கால தேவை காரணமாக மத்திய அரசு இறக்குமதி வரியை அக்டோபர் 31 வரை நீக்கியுள்ளது. இதை பயன்படுத்த பாகிஸ்தான் 12 லட்சம் டன் உபரி சர்க்கரையை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முனைகிறது. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நேரடி வர்த்தகம் நிறுத்தப்பட்டாலும் மூன்றாம் நாட்டின் மூலம் பரிமாற்றம் தொடர்கிறது.
நாடு முழுவதும் சர்க்கரையின் விலையானது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்து காணப்படுகிறது. குறைவான கரும்பு உற்பத்தி, பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பு போன்றவைகள் காரணங்களாக சொல்லப்படும் நிலையில், இந்தியாவில் சர்க்கரை இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு முற்றிலும் நீக்கியுள்ளது.
இந்நிலையில் தான் இந்தியாவில் இருக்கும் சக்கர்க்கரை தட்டுப்பாட்டை பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் முனைந்துள்ளது. பாகிஸ்தானில் தற்போது சர்க்கரை உற்பத்தி உபரியாக உள்ள நிலையில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது குறித்து உற்பத்தியாளர்கள் சங்கம் அந்நாட்டு அரசை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் உபரியாக 12 லட்சம் டன் சர்க்கரையை வைத்துள்ள நிலையில் வரும் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இரு நாடுகளும் பரஸ்பர வர்த்தகத்தை நிறுத்திவைத்திருந்தாலும் 3ஆவது நாட்டு வழியாக பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி நடந்துவருகிறது. இந்தியாவில் சர்க்கரை தட்டுப்பாட்டை தவிர்க்க வரும் அக்டோபர் 31 வரை 10 லட்சம் மெட்ரிக் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அரசு அனுமதித்துள்ளது.
சர்க்கரை விலையேற்றத்திற்கு மோடி அரசின் தவறான எத்தனால் கொள்கையே காரணம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள அவர், மோடி அரசின் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள கசப்பு, சர்க்கரையில்கூட ஊடுருவிவிட்டது என்று கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளரான இந்தியாவுக்கு அதை இறக்குமதி செய்யும் நிலை ஏன் ஏற்பட்டது என்றும் கார்கே வினவியுள்ளார்.
பண்டிகைக்காலத்தில் இச்சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் 3 மாதங்களில் சர்க்கரை விலை 40% உயர்ந்துள்ளதாகவும் கார்கே கூறியுள்ளார். இது போன்ற இக்கட்டான நேரத்தில்கூட கரும்பை எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடும் முடிவை ஏன் மறுபரிசீலனை செய்யவில்லை என்றும் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தசூழலில் பாகிஸ்தானிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்வதை இந்தியா நிராகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.