இந்தியா

இந்திய உணவுகள் குறித்து தவறான தகவல்கள் ! பேஸ்புக், கூகுள் தடுக்க அரசு அறிவுரை

இந்திய உணவுகள் குறித்து தவறான தகவல்கள் ! பேஸ்புக், கூகுள் தடுக்க அரசு அறிவுரை

webteam

சமூக வலைதளங்களில் உணவுப் பொருட்கள் குறித்து வெளியாகும் தவறான செய்திகளைத் தடுக்க வேண்டும் கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் தரமற்ற உணவுப் பொருட்கள் அதிகம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடம் அந்த ஆணையம் புகார் தெரிவித்துள்ளது. அதன்பேரில் போலியான செய்திகளை தடுப்பது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தவறான தகவல்களை பரப்பும் கணக்குகள், மற்றும் பக்கங்களை முடக்க வேண்டும் என கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தகவல் தொழில்நுட்பத்துறை, ''சமூக வலைதளங்களில் இந்தியாவில் கிடைக்கும் உணவுகளின் தரம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படும் செய்தி எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. தவறாக பரப்பப்படும் செய்தி இந்தியாவின் நன்மதிப்பை குலைத்துவிடும். மக்களின் நம்பிக்கையை கெடுத்துவிடும். பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை என தவறான செய்திகள் வேகமாக பரவுகின்றன. இதனையடுத்து தவறான தகவல்களை பரப்பும் கணக்குகளை முடக்க வேண்டும் என கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம், உணவு குறித்த தவறான செய்தி பரவுவது உணவு சார்ந்த தொழில்களுக்கு நல்லதல்ல. தவறான செய்திகள் இந்தியா மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும்.  இந்த விவகாரத்தில் சமூக வலைதள நிறுவனங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.