இந்தியா

மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து: மத்திய அரசு

மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து: மத்திய அரசு

JustinDurai

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்துகளை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை குணப்படுத்துவதில் ரெம்டெசிவிர் ஊசி மருந்து சிறப்பான வகையில் பயனளிக்கிறது. இதனால் உலகளவில் இந்த மருந்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்துகளை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் நிதி ஆயோக் உறுப்பினரும் (சுகாதாரம்) மருத்துவருமான வி.கே.பால் கூறுகையில், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர், ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுவோருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தை வழங்கவேண்டும். அந்த மருந்தை வீடுகளில் பயன்படுத்தவும், லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கும் வழங்கக் கூடாது.

சில பகுதிகளில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மருந்து அதிக அளவில் கிடைக்கிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு சரியான, நியாயமான முறையில் ரெம்டெசிவிர் கிடைப்பதை மருத்துவா்கள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்தாா்.