செய்தியாளர் - கார்த்திகேயன்
தமிழகத்தை தவிர்த்து இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கடுமையான மழைப்பொழிவை ஏற்படுத்துவது தென்மேற்கு பருவகாலம் தான். குறிப்பாக, வடஇந்தியாவில் உள்ள ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைய இருப்பதால், ஒடிசா மாநிலத்தில் மிக கனமழை முதல் அதிதீவிர கனமழை வரை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாலசோர் மாவட்டத்தில் உள்ள போக்ரா பகுதியில் அதிகபட்சமாக 236 மில்லி மீட்டர் மழையும், ஷியாமகுண்டா பகுதியில் 230 மில்லி மீட்டர் மழையும், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பரிபாடாவில் 215 மில்லி மீட்டர் மழையும், ராஜ்காட் பகுதியில் 204 மில்லி மீட்டர் மழையும் பெய்து தற்போது வரை பதிவாகியுள்ளது.
இந்த தீவிர இயற்கை சீற்றத்தை கருத்தில் கொண்டு, ஒடிசா மாநிலம் முழுவதற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை, வானிலை மையம் விடுத்திருக்கிறது. இந்த வளிமண்டல மாற்றத்தால், ஒடிசா மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான சத்தீஸ்கர், ஜார்க்கண்டிலும், மேற்குவங்கத்தின் கங்கை சமவெளிப் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கும் என்று, வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடலோரப் பகுதிகள் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால், மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எச்சரித்துள்ள வானிலை மையம், ஓடிசா மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தற்போது வரை புயல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறி, வானிலை மையம் சற்று ஆறுதல் அடைய வைத்திருக்கிறது.