மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
திட்ட வரைவுக்கு மட்டுமே மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இறுதி அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதைத் தடுக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து மேகதாது அணைக் கட்ட கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி தரக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். மேலும் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனவும் அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் மேகதாது அணை திட்டத்தை தமிழகம் ஏன் எதிர்க்கிறது எனத் தெரியவில்லை எனவும் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசிடம் நேரம் கேட்டிருப்பதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.