இந்தியா

அமலுக்கு வந்த ஊரடங்கு - வங்கிக் கடனுக்கான இஎம்ஐ செலுத்துவதில் சலுகைகள்?

webteam

கொரோனா எதிரொலியாக, வங்கியில் பெற்ற கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்துவதில் சில சலுகைகளை ரிசர்வ் வங்கி விரைவில் அறிவிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுதைத் தடுக்கும் முயற்சியாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் நிலவி வருகிறது. மேலும், ஏராளமான தொழில் நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள், சுயதொழில் செய்வோர், வீடுகட்ட கடன் பெற்றோர் ஆகியோர் வருமானம் ஈட்டுவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். வங்கியில் பெற்ற கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்துவதிலும் சிரமங்கள் நேரலாம். இதைத் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி சில சலுகைகளை அறிவிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

இதனிடையே மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு அடுத்த 3 மாதங்களுக்கு எந்த ஏடிஎம் மையத்தில் சென்று பணம் எடுத்தாலும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், வங்கியில் கடன் பெற்றவர்கள் தங்களின் இஎம்ஐ தொகையை செலுத்தக் கால நீட்டிப்பு வழங்கப்படலாம், அல்லது வட்டி தள்ளுபடி செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “144 தடை உத்தரவால் கடன் செலுத்துவதில் சிரமம் ஏற்படும். ஆதலால், சலுகைகள் தேவை என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியும் இதைக் கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இந்திய வங்கிகள் கூட்டமைப்பும் இதே கோரிக்கையை வைத்துள்ளன. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்” எனத் தெரிவித்தார்.