இந்தியா

 “தண்ணீர் பஞ்சம் என எதிரணியில் இருக்கும் 37 பேரும் பொய் பரப்புரை செய்கிறார்கள்” : மக்களவையில் ரவீந்திரநாத்

webteam

அதிமுக அரசு ஊழல் அரசு அல்ல எனவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க அதிமுக அரசு ஏராளமான திட்டங்களை தீட்டி வருவதாகவும் அக்கட்சியின் எம்.பி ரவீந்திரநாத் மக்களவையில் தெரிவித்துள்ளார். 

திமுக எம்.பி தயாநிதிமாறன் நேற்று மக்களவையில் பேசும்போது, “தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிமுக அரசு ஊழல் அரசு. குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது” எனத் தெரிவித்தார். 

இதையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதிமுகவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்தது. குடியரசுத் தலைவர் உரையில் சம்பந்தம் இல்லாமல் தயாநிதி மாறன் அதிமுக அரசு குறித்து தரக்குறைவாகப் பேசுகிறார் என பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிமுக எம்.பி ரவீந்திரநாத் மக்களவையில் பேசினார். அப்போது அதிமுகவை ஊழல் அரசு என்று திமுக கூறியதற்கு ரவீந்திரநாத் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் பிரதிநிதியாக நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன். எனக்கு எதிராக இருக்கும் 37 பேர் பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினைக்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ரவீந்திரநாத் பட்டியலிட்டார். இந்தப் பட்டியல்களை திமுக
உறுப்பினர்களுக்கு தான் வழங்க தயாராக இருப்பதாகவும், அதை திமுக உறுப்பினர்கள் படித்துப் பார்க்கலாம் எனவும் தெரிவித்தார். ரவீந்திரநாத் பேசியபொழுது கூச்சல் குழப்பங்கள் ஏற்படவே எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இதையடுத்து அவர் பேச்சு பாதியிலேயே முடிக்கப்பட்டது.