கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள சர்ச்சில் அம்மாநிலத்தை சேர்ந்த நால்வரும் டெல்லியை சேர்ந்த ஒருவரும் பாதிரியாராக உள்ளனர். இந்நிலையில் சர்ச் நிர்வாகத்திற்கு திருவலாவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதில் பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் சர்ச் நிர்வாகி ஒருவரும் பேசிய ஆடியோ பதிவுகள் வெளியாகியது. அதில், திருமணத்திற்கு முன்பு தனது மனைவி பாதிரியார் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகளின் ஞானஸ்தானத்தின் போது, இதுகுறித்து மற்றொரு பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டுள்ளார். பாவமன்னிப்புகளை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய பாதிரியாரோ எனது மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை மற்ற மூன்று பாதிரியாரிடமும் தெரிவித்துள்ளார்.அவர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பேசியிருந்தார்.
இந்த விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இது குறித்த ஆடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் அதை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து இவ்விவகாரத்தில் தீர்வு காண உட்படுத்த தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்தது. இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அம்மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா உத்தரவிட்டார்.
இந்த நிலையில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில் அரசியல் நெருக்கடி காரணமாக தங்கள் மீது இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ராஜா விஜயராகவன் உத்தரவிட்டார். இதனையடுத்து இவ்விவகாரத்தில் கடந்த வாரம் பாதிரியார் ஜோப் பி மாத்யூ மற்றும் ஜான்சன் பி மாத்யூவை போலீஸார் கைது செய்தனர்.
இதில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு பாதிரியார் ஆபிரகாம் வர்க்கீஸ் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை தொடங்கிய உச்ச நீதிமன்றத்தில் மறு உத்தரவு வரும் வரை பாதிரியார்களை கைது செய்யக் கூடாது என்று கேரளா போலீஸாருக்கு நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில் பாதிரியார் ஆப்ரகாம் வர்கீஸ் நேற்று தன் பக்க நியாயங்களை பேசி யுடியூபில் வீடியோவை வெளியிட்டார்.
அதில் புகார் கொடுத்த பெண்ணி்ன் பெயர், அவரின் கணவர் பெயர், அந்தப் பெண் பணி புரிந்திருந்த பள்ளியின் பெயரை எல்லாம் சொல்லிவிட்டார். மேலும் அதில் "நான் குற்றமற்றவன். என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியப் பெண் என் உறவினர். நான் அப்படிப்பட்ட நபர் இல்லை. ஆனால் அந்தப் பெண்ணின் தாயிடம் பேசியப் பின்புதான் தெரிந்தது, அந்தப் பெண்ணுக்கு சில தவறான உறவுகள் இருப்பது தெரிந்தது. இந்த வழக்கில் இருந்து நிச்சயம் நான் விடுதலையாவேன்" என்று கூறியிருந்தார்.
பாலியல் வன்கொடுமை காரணமாக பெண்ணின் விவரங்களை வெளியிடக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. அதனை மீறி ஆப்ரகாம் வர்கீஸ் செயல்பட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு கண்டனங்கள் எழுப்பப்படவே, சில மணி நேரங்களில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் "பாதிரியார் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிட்டது மனிதத் தன்மையற்ற செயல். இது குறித்தும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்றார் அவர்.