இந்தியா

ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் - பெண்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக போலீஸில் புகார்

ஜா. ஜாக்சன் சிங்

நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு பெண்களின் உணர்வுகளை நடிகர் ரன்வீர் சிங் காயப்படுத்தி விட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரன்வீர் சிங். இவரும், பிரபல நடிகை தீபிகா படுகோனேவும் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், துருக்கி நாட்டில் இருந்து வெளியாகும் 'Turkish Rug' என்ற இதழில் ரன்வீர் சிங்கின் நிர்வாணப் புகைப்படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

துணிச்சலாக நிர்வாண போஸ் கொடுத்ததற்காக ரன்வீர் சிங்குக்கு ஒருபுறம் பாராட்டுகள் வந்தாலும், இந்திய கலாச்சாரத்தை அவர் சீர்குலைத்துவிட்டதாக அவர் மீது விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், ஷியாம் மங்காராம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் மும்பையில் உள்ள செம்பூர் காவல் நிலையத்தில் நடிகர் ரன்வீர் சிங் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், தனது நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பெண்களின் உணர்வுகளை ரன்வீர் சிங் காயப்படுத்தி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து விசாரித்து வருவதாகவும், தேவைப்பட்டால் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.