இந்தியா

அமிர்தசரஸ் விபத்து: ராவணன் வேடமிட்டவரும் பலியான பரிதாபம்!

webteam

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த விபத்தில், ராவணன் வேடமிட்டவரும் உயிரிழந்த சம்பவம், பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவபொம்மைக்கு தீயிடும் நிகழ்வு நடைபெற்றது. அதிக உயரமுடைய உருவபொம்மை எரிவதைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அந்தப் பகுதியில் ரயில் பாதை உள்ள நிலையில், ஏராளமானோர் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாகச் சென்ற ரயில் அவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விட்டுச் சென்றது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 61 பேர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில அமைச்‌சர் நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தசரா விழாவில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

அவர் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் பஞ்சாப் அரசு அறிவுறுத்தியுள்ளது.

(குழந்தையுடன் தல்வீரின் மனைவி)

இதற்கிடையே இந்த தசாரா விழாவில் ராவணனாக வேடமிட்ட தல்பீர் சிங் என்பவரும் உயிரிழந்த தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. வயதான அம்மா, மனைவி மற்றும் 8 மாதக் குழந்தையுடன் வசித்து வந்தார் தல்பீர். 

இந்நிலையில் தல்பீரின் தாய், ‘தனது மருமகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.