இந்தியா

‘ராமர் கடவுள் இல்லை; ஒரு கதாபாத்திரம்தான்’ - பாஜக கூட்டணி கட்சி தலைவரின் பேச்சால் சலசலப்பு

சங்கீதா

‘ராமர் கடவுள் இல்லை, ஒரு கதையின் கதாபாத்திரம்தான்’ என்று பீகாரின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் கூட்டணிக் கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி, அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி நேற்று ஜமுய் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “ராமர் கடவுள் இல்லை. அவர் கதையில் வரும் ஒரு கதாபாத்திம். துளசிதாஸ், வால்மீகி ஆகியோரின் கருத்துகளைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம்தான் ராமர். இந்த கதாபாத்திரத்தை வைத்துதான் காவியம் மற்றும் மகா காவியத்தை உருவாக்கினார்கள். துளசிதாஸ், வால்மீகி ஆகியோரின் எழுத்துகளில் நல்ல கருத்துகள் நிறைந்திருக்கின்றன. நாங்கள் அவர்கள் இருவரையும் வணங்குகிறோம்... ராமரை அல்ல.

நீங்கள் ராமரை நம்பினால், சபரி கடித்துக் கொடுத்த பழத்தை ராமர் சாப்பிட்டதாக கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். நாங்கள் கடித்துக் கொடுத்தப் பழத்தை நீங்கள் சாப்பிட வேண்டாம். எங்கள் கைப்பட்ட பழத்தையாவது சாப்பிடுங்கள். இந்த உலகத்தில் பணக்காரர் மற்றும் ஏழை என்ற இரண்டு சாதிகள்தான் இருக்கின்றன.

ஆனால், பிராமணர்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டிவருகின்றனர். குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டத்தின்போது மோதல் வெடித்தது. அதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்'' இவ்வாறு அவர் பேசினார்.

ஜிதன் ராம் மாஞ்சியின் மகன் சந்தோஷ் மாஞ்சி, பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான, பாஜக கூட்டணி அரசின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில், ஜிதன் ராம் மாஞ்சியின் பேச்சு அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.