இந்தியா

“கவுரவம் பார்க்காமல் விவசாயிகளிடம் பேசுங்கள்” -அனல் பறந்த ஃபரூக் அப்துல்லா பேச்சு

webteam

கவுரவம் பார்க்காமல் விவசாயிகளிடம் போய் பேசுங்கள் என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் மக்களவை எம்பியும் ஆன ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் ஆவேசத்துடன் பேசிய அவர், “ஜம்மு-காஷ்மீரில் 4 ஜி சேவைகள் திரும்ப தொடங்கியதற்கு நன்றி கூறுகிறேன். கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி உருவாக்கியதற்காக இந்திய விஞ்ஞானிகள் மற்றும் எஸ்.ஐ.ஐ ஆகியோருக்கு வாழ்த்துகள். இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் விநியோகிப்பது அவசியம். இப்போது கூட, மிகச் சிலரே தடுப்பூசிகளைப் பெறுகிறார்கள். இந்த நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க அதிகபட்ச நபர்களுக்கு தடுப்பூசி போட முயற்சிக்க வேண்டும்.

வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளிடம் போய் பேச வேண்டும். அவர்களின் பிரச்னைகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு தீர்வு காண வேண்டும். கடவுள் நம் அனைவரையும் ஒரே மாதிரியாக படைத்துள்ளார். நீங்கள் ஒரு கோவிலுக்குச் செல்லுங்கள். நான் ஒரு மசூதிக்குச் செல்கிறேன். ராமர் உலகம் முழுவதையும் சேர்ந்தவர். நம் எல்லோருக்கும் சொந்தமானவர். அதேபோல குர்ரான் என்பதும் முஸ்லீம்களுக்கு மட்டுமானது அல்ல.

மாற்றங்கள் செய்ய முடியாது என்பதற்கு வேளாண் சட்டங்கள் ஒன்றும் வேதம் அல்ல. விவசாயிகள் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய விரும்பினால் அவர்களுடன் ஏன் பேச முடியாது? நீங்கள் உங்கள் கவுரவத்தில் நிற்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது நம்முடைய தேசம். நாங்கள் இந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள். தேசத்தில் உள்ள அனைவரையும் மதிப்போம்.

ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் பிற தலைவர்களை கைகாட்டுவது வருத்தமாக உள்ளது. நாளை நீங்கள் பதவியில் இல்லாமல் இருக்கலாம். அப்போது தற்போதைய பிரதமரை பற்றி பேசுவோமா? இது இந்திய பாரம்பரியம் அல்ல. சென்றவருக்கு மதிப்பளிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

<iframe width="716" height="403" src="https://www.youtube.com/embed/wfdv28OoIrA" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>