இந்தியா

மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக “பாகுபலி” ஸ்பெஷல் ஷோ - ஏன் எதற்கு?

webteam

பன்மொழி சமுதாயத்தை மேம்படுத்த அனைத்து ராஜ்யசபை உறுப்பினர்களுக்கும் “பாகுபலி” படத்தை திரையிட ராஜ்யா சபை செயலகம் முடிவு செய்துள்ளது.

ராஜ்ய சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மகாதேவ் சாலையில் உள்ள “பிலிம்ஸ் டிவிஷன் ஆடிட்டோரியத்தில்” ஏப்ரல் 1 ஆம் தேதியன்று “பாகுபலி” படத்தின் முதல் பாகத்தை சிறப்புக் காட்சியாக திரையிட ராஜ்யசபை செயலக பொழுதுபோக்கு கிளப் ஏற்பாடு செய்துள்ளது. தென்னிந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ராஜமவுலி இயக்கி, வசூலில் இந்திய அள்வில் சாதனை படைத்த திரைப்படம் பாகுபலி. இந்தி பேசும் மற்றும் பிற மொழி பேசும் மக்களிடையே மொழிப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க ராஜ்யசபையின் இந்தி சலாஹ்கர் சமிதி அளித்த பரிந்துரையை ஏற்று இந்த சிறப்புத் திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாகுபலி படத்தின் தெலுங்கு பதிப்பை திரையிட ராஜ்யா சபா செயலகம் திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்புத் திரையிடல் பன்மொழி சமுதாயத்தை மேம்படுத்த உதவும் என்று ராஜ்யசபை செயலக பொழுதுபோக்கு கிளப் கூறியுள்ளது. ராஜ்யசபையின் அனைத்து உறுப்பினர்களும் இந்த சிறப்புத் திரையிடலில் பங்கேற்க வேண்டுகோளையும் விடுத்துள்ளது. உறுப்பினர்களின் புரிதலுக்காக ஆங்கிலத்தில் சப்-டைட்டில் திரைப்படத்தில் தோன்றும் எனவும் ராஜ்ய சபை செயலகம் தெரிவித்துள்ளது. நேற்று பாகுபலியை இயக்கிய ராஜமவுலியின் இயக்கத்தில், ஜூனியர் எண்டிஆர், ராம்சரண் நடிப்பில் “ஆர்.ஆர்.ஆர்.” திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.